சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கல்முனை நற்பிட்டிமுனையில் உள்ள அனோஜனின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அனோஜனின் தாயார் மற்றும் சகோதரர்களைச் சந்தித்த அவர், அனோஜனின் நிலைமை குறித்து உரிய தரப்பினருடன் கலந்துரையாடுவதாக உறுதி அளித்தார். இச்சந்திப்பின் போது அவர் தெரிவித்த முக்கிய அம்சங்கள்:
அவசர வேண்டுகோள்: முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து, அனோஜனின் விடுதலை தொடர்பாக இலங்கை ஜனாதிபதிக்கும் சவூதி மன்னருக்கும் அவசர கோரிக்கை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜம்இய்யத்துல் உலமாவின் தலையீடு: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் சவூதி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க வலியுறுத்தப்படும்.
கூட்டு முயற்சி: நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சாணக்கியன் ராசமாணிக்கம் மற்றும் மனோ கணேசன் ஆகியோருடன் தொலைபேசியில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், அனைவரும் குழுவாக இணைந்து இதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.
தான் தொலைபேசியில் அழைத்தபோது மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அனோஜன் கூறியதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இச்சந்திப்பில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சீ. எம். முபீத் மற்றும் ஊர் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
