நபிகள் நாயகத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதைப் பற்றி பேசும் போதெல்லாம், அவரது கருணை, இரக்கம் மற்றும் மன்னிப்பு போன்ற போதனைகளையும் நாம் பிரதிபலிக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி, இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மேற்கோள் காட்டியுள்ள கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
சமூக வலைத்தளப் பதிவு ஒன்றுக்காக சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவிற்கு, தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் அலி சப்ரி தனது கடுமையான கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஒரு சமூக வலைத்தளப் பதிவுக்காக வழங்கப்படும் இந்தத் தண்டனை “மிகவும் அளவுகடந்தது, மனிதநேயமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
புனித திருக்குர்ஆனின் சூரா அந்-நஹ்ல் (16:126) வசனத்தைக் குறிப்பிட்டுள்ள அலி சப்ரி:
“நீங்கள் தண்டனை அளிப்பதாக இருந்தால், உங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்குக்கு நிகரான தண்டனையையே அளியுங்கள்; ஆனால் நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்தால், நிச்சயமாக அதுவே பொறுமையாளர்களுக்கு மிகச் சிறந்ததாகும்.”
என்ற இறைவசனத்தைச் சுட்டிக்காட்டி, உண்மையான முஸ்லிம்கள் நீதியோடு சேர்த்து கருணையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
“நீதியில் கருணைக்கு எப்போதும் இடம் இருக்க வேண்டும். அனோஜன் தவறை உணர்ந்து தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்து, வாழ்க்கையை சீரமைக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்,” என்று கூறியுள்ள அலி சப்ரி, அனோஜனுக்குத் தேவையான சட்ட உதவிகளை உடனடியாக வழங்கவும், உயர்மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மூலம் அவரது உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஒரு உண்மையான முஸ்லிமின் கடமையை உணர்ந்து, திருக்குர்ஆனின் நெறிமுறைகளுக்கு ஏற்ப கருணையை வலியுறுத்தி குரல் கொடுத்துள்ள முன்னாள் அமைச்சர் அலி சப்ரியின் இந்த மனிதநேயப் பண்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
