கடந்த 24.06.2026 முதல் சமூக ஊடகங்களில் ஆரிகாமம் மஸ்ஜித் தொடர்பாகப் பரப்பப்பட்டு வரும் பல்வேறு தவறான கருத்துக்கள் மற்றும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு உண்மை நிலையை விளக்கும் வகையிலும் பள்ளிவாசல் நிர்வாகம் விரிவான தெளிவறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விபரங்கள் பின்வருமாறு:
1. ஜூம்ஆ பிரசங்கம் (12.06.2026) குறித்த விளக்கம்:
கடந்த ஜூன் 12 ஆம் திகதி நடைபெற்ற ஜூம்ஆ பிரசங்கமானது முஹர்ரம் மாதத்தின் சிறப்பு, புதிய ஹிஜ்ரி ஆண்டை நற்சிந்தனைகளுடன் வரவேற்பதன் அவசியம் மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை மட்டுமே கருப்பொருளாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டது.
சமூக ஊடகங்களில் பரப்பப்படுவது போல, எந்தவொரு தனிநபருக்கோ அல்லது குழுவினருக்கோ எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலோ, பிற மதத்தினரின் உரிமைகளுக்கு எதிராகவோ எந்தவொரு கருத்தும் அங்கு முன்வைக்கப்படவில்லை. மாறாக, அமைதியான சகவாழ்வே வலியுறுத்தப்பட்டது என நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
2. ஈதுல் அழ்ஹா குர்பானி நிகழ்வுகள்:
இவ்வருட பெருநாளை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட குர்பானி நிகழ்வுகள் அனைத்தும், பல ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் மார்க்க வழிகாட்டல்களுக்கும், இலங்கைச் சட்டங்களுக்கும் அமையவே மேற்கொள்ளப்பட்டன. இதற்குத் தேவையான அனைத்து சட்டபூர்வ அனுமதிகளும் உரிய அதிகாரிகளிடம் முறையாகப் பெறப்பட்டு, அரச அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் அமைதியாக நிறைவேற்றப்பட்டது. எனவே, சட்ட மீறல் நடந்ததாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.
3. ஸியாரம் (தர்கா) பராமரிப்பு மற்றும் அணுகுமுறை:
பள்ளிவாசலுக்கு அண்மையில் அமைந்துள்ள ஸியாரம் (தர்கா) பல ஆண்டுகளாக வழக்கமான பராமரிப்பின் கீழ் இருந்து வருகிறது. இது தொடர்பாக இலங்கை வக்ஃப் சபை, முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆகியவற்றுக்குத் தேவையான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மஸ்ஜித் தொடர்புடைய விடயங்களை சட்டப்பூர்வமாகக் கையாளும் வக்ஃப் சபை மற்றும் முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடம் தீர்வு கோராமல், மாற்று மத சமூகத்தினரிடம் தீர்வு கோரிச் சென்றிருப்பது மிகவும் வருந்தத்தக்கது என பள்ளிவாசல் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மற்றும் வதந்திகளைப் பகிர்வதைத் தவிர்த்து, சமூக நல்லிணக்கம் மற்றும் சட்ட ஒழுங்கைப் பேணும் வகையில் அனைவரும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
