கடந்த 2022.02.28 ஆம் திகதி சமூக ஊடகமொன்றில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அடிப்படைக் காரணம் புனித அல்குர்ஆன் ஆகும் என்ற கருத்தை சர்ச்சைக்குரிய ஒரு நபர் முன்வைத்திருப்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிக வன்மையாகக் கண்டித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அறிக்கை யொன்றை வெளியிட்டுள்ளது.
இதனிடையே, அல்குர்ஆன் அமைதியையும் சமாதானத்தையும் சகவாழ்வையும் வலியுறுத்தும் புனித வேதமாகும். இதற்கு அதன் போதனைகள் ஆதாரமாக அமைகின்றன.
உலகத்தாருக்கு அருளாக அனுப்பப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலகில் சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்டினார்கள் என்பதை வரலாறு சான்று பகர்கின்றது எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை சனத்தொகையில் 9.7 வீதம் மக்களாலும், உலகளவில் 1.8 பில்லியன் மக்களாலும் பின்பற்றப்படக்கூடிய புனித அல்குர்ஆனையும், இறுதித் தூதரையும் இழிவாக பேசி அறிவுப்பூர்வமற்ற முறையில் விமர்சிப்பதானது உள்நாடு மற்றும் சர்வதேச முஸ்லிம்களின் மத உணர்வை புண்படுத்துவதாக அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், பேச்சு சுதந்திரத்தை மற்றவர்களின் உணர்வுகளை நிந்திக்கக்கூடிய வகையிலும் மக்கள் மதிக்கக்கூடிய விடயங்களை அகௌரவப்படுத்தும் வகையிலும் பயன்படுத்துவது கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டிய அதேநேரம் அதற்கெதிராக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சுய இலாபம் கருதி மக்கள் மத்தியில் சந்தேகங்களையும் பிரச்சினைகளையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தும் இவ்வாறான பேச்சுக்களுக்கெதிராக அவசர நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று உரிய அதிகாரிகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக்கொண்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் முஸ்லிம் சமூகம் அவசரப்படாமல் நிதானமாகவும் அமைதியாகவும் செயற்பட வேண்டுமென்றும், முஸ்லிம்களை தூண்டி பிரச்சினைகளை ஏற்படுத்த விளையும் இவ்வாறான நபர்கள் வரலாறு நெடுகிலும் காணப்பட்டுள்ள அதேநேரம் இவ்விடயங்களை முஸ்லிம்கள் அறிவு ரீதியாகவும் தூரநோக்குடனும் அணுக வேண்டுமென்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்வதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.