ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யும் வரை இடைக்கால அரசாங்கம் போன்ற எந்தவொரு பிரேரணையையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, ஜனாதிபதி ராஜபக்ஷ ஆட்சியில் இருக்கும் போது செய்யப்படும் எந்தவொரு பிரேரணையும் மக்களின் வன்முறைப் போராட்டங்களைத் தணிக்காது.
ஏனெனில் மக்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் பாராளுமன்றத்தில் கூறினார்.
மேலும், மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட எந்தப் பிரேரணைகளும் பலனளிக்கவில்லை எனத் தெரிவித்த அவர், ஜனாதிபதி ‘வீட்டிற்குச் செல்ல வேண்டும்’ என மக்கள் வலுவாகக் கோருவதாகவும் தெரிவித்தார்.
‘அமைச்சரவையில் இருந்து விலகுவதோ அல்லது இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதோ தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வாகாது’ என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதி பதவியில் இருந்து முதலில் இராஜினாமா செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், நெருக்கடியைத் தீர்ப்பதற்கு முன்மொழிய அல்லது முன்மொழியப்பட்ட எந்தவொரு பொறிமுறையையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.