அங்கீகரிக்கப்பட்ட உரிமம் இன்றி எரிபொருள் விற்பனை செய்பவர்களை கைது செய்வதற்காக நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், இவ்வாறான முறைகேட்டில் ஈடுபட்ட 68 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனையின் போது 8,025 லிட்டர் பெட்ரோல் மற்றும் 726 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகப்படியான எரிபொருளை கொள்வனவு செய்து வேறு இடங்களில் அதிக விலைக்கு விற்பதன் மூலம் பலர் சட்டவிரோத வியாபாரங்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
மேலும், கேன்கள் மற்றும் பீப்பாய்களில் அதிகப்படியான எரிபொருளை கொள்முதல் செய்து, பின்னர் பொதுமக்களுக்கு அதிக விலைக்கு விற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த மோசடியானது வாகனங்கள் மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்கு எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு நீண்ட வரிசையில் நிற்கும் பல நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எரிபொருளின் தட்டுப்பாடு மற்றும் தொடர்ச்சியான மின்வெட்டு என்பன தனிநபர்கள் இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுவதற்கு பங்களித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சட்டவிரோத எரிபொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்வதற்காக நேற்று திடீர் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்களை ஏமாற்றும் இவ்வாறான நபர்களை கைது செய்ய நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் சோதனைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.