அலரிமாளிகை, காலி முகத்திடல் மற்றும் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 230 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கொலைகள், தாக்குதல்கள், பலத்த காயங்கள், வீடுகள், வாகனங்கள், வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் தீ வைப்புக்கள் தொடர்பிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் அவர்களில் 68 பேர் விளக்கமறியலில் உள்ளனர் என்றும் சம்பவம் தொடர்பில் 702 நபர்களிடம் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 702 வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த வாரம் இடம்பெற்ற துரதிஷ்டவசமான சம்பவங்கள் தொடர்பில் சேகரிக்கப்பட்ட காணொளி ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாது பொதுமக்கள் பொலிஸ் தலைமையகத்திற்கு 1997 மற்றும் 118 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி telligp@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் வழங்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.