அம்பாறை மாவட்டத்தில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் நிவாரணக் கொடுப்பனவு வழங்குவதற்கென 2,002 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ், இன்று (23) தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சுழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இம்மாதம் முதல் ஜுலை மாதம் வரை மாதாந்தம் 5,000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு, இவ்வாரம் முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்து.
நாளாந்த வருமானத்தை இழந்துள்ள, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், சமுர்த்திப் பயணாளிகள், சமுர்த்தி பெறுவதற்கு காத்திருப்புப் பட்டியலில் உள்ளோர் ஆகியோருக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக இக்கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.
அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலகங்களை ஒருங்கிணைத்து 43 சமுர்த்தி வங்கிகள் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதனடிப்படையில், அம்பாறை மாவட்டத்தில் 89,438 சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களும், 30,848 சமுர்த்தி பெறுவதற்கு காத்திருப்புப் பட்டியலில் உள்ள குடும்பங்களுக்கும், வருமானம் குறைந்த குடும்பங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.