சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, எதிர்வரும் 4ஆம் திகதி திறந்த பல்கலைக்கழகத்தில் இளைஞர் விவகாரம் மற்றும் சமூக அபிவிருத்திக்கான இளங்கலை இறுதியாண்டு இறுதிப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் வெலிக்கடை சிறைச்சாலை சிறைத்தண்டனை பெற்று வருகின்றார்.
ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டதன் பின்னர், திறந்த பல்கலைக்கழகத்தில் இளைஞர் விவகாரம் மற்றும் சமூக அபிவிருத்தியில் இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடர்வதற்குத் தேவையான வசதிகளைக் கோரியிருந்தார்.
அதற்கமைய சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், விசேட பாதுகாப்பின் கீழ், தேவையான வசதிகளை வழங்கினார்.
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளுக்கு அமைவாக ரஞ்சனை பரீட்சையில் பங்குபற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சந்தநாயக்க ஏக்கநாயக்க மேலும் தெரிவித்தார்.
இதேவேளை அண்மையில் பட்டப்படிப்பை தொடர ரஞ்சன் ராமநாயக்க அது தொடர்பிலான ஒன்லைன் விரிவுரைகளில் பங்கேற்க அனுமதி வழங்குமாறும் சட்டத்தரணியிடம் கோரினார்.
இந்நிலையில் குறித்த கோரிக்கையானது சிறைச்சாலை அதிகாரிகளினால் கவனத்திற்கொள்ளப்படுமெனவும் அவர்கள் அதற்கு அனுமதியளிக்க மறுக்கும் பட்சத்தில் அதுதொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்யுமாறும் உயர்நீதமன்றம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.