பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் நாட்டை வழிநடத்துவார் என்று தங்களுக்கு நம்பிக்கையில்லை எனக் கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் ரிஷி சுனக், சுகாதார அமைச்சர் ஷாஜித் ஜாவேத் ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.
இதனால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நிதியமைச்சர் ரிஷி சுனக் தனது கடிதத்தில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது கவலை தருகிறது. ஆனால், இதே நிலையில் தொடர முடியாது என்பதால் வெளியேறுகிறேன்.
அரசாங்கம் ஒழுங்காக, சிரத்தையுடன், திறம்பட நடத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதற்கு வாய்ப்பில்லை என்பதால் நான் இராஜினாமா செய்கிறேன் என்று தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக இடம்பெற்று வந்த போராட்டங்கள் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
எவ்வாறாயினும், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஏற்கனவே புதிய நிதியமைச்சர் மற்றும் சுகாதார செயலாளரையும் நியமித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் போரிஸ் தனது அரசாங்கத்தை பலப்படுத்துவதும் அமைச்சரவை மாற்றத்துடன் முன்னேறுவதும் தனது திட்டம் என்றும் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், போரிஸ் ஜோன்சனின் ஆட்சியில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி ஊழல் நிறைந்ததாக மாறியுள்ளது என்று பிரிட்டிஷ் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறுகிறார்கள்.
இதனைக் கருத்திற் கொண்டு அமைச்சரவை அமைச்சர்கள் தமது அமைச்சரவைப் பதவிகளை விட்டுவிட்டு பிரதமருக்கு எதிராக நிற்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.