கட்டுவாப்பிட்டிய நீர்கொழும்பு புனித செபஸ்தியன் கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதி விக்கிரமசிங்கவிற்கு எதிரான வழக்குகளின் தீர்மானம் அவர் ஜனாதிபதி பதவியை வகிக்கும் காலத்திற்கு மட்டுமே செயல்படும் என்று நீதிமன்றம் கூறியது.
நாட்டின் ஜனாதிபதியாக இரண்டாவது பிரதிவாதியான ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் 35 (1) வது சரத்தின் பிரகாரம் விடுதலைப் பெறுவதற்கு உரிமையுள்ளவர் என நீர்கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி நுவன் தாரக ஹீனடிகல குறிப்பிட்டார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த ஆட்சேபனைகளை நிராகரித்த நீதிமன்றம், அவருக்கும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதம அதிகாரி நிலந்த ஜயவர்தன உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கும் எதிரான வழக்குகளை தொடரவும் தீர்மானித்துள்ளது.
கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியன் கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போதைய பிரதமர் ரணிலிடம் நட்டஈடு கோரி நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் பல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.