அநியாயம் இழைக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பின்னால் இருக்கின்ற வேதனைகளையும் வலிகளையும் புரிந்து கொள்கின்ற மனோநிலையில் வியாழேந்தின் இல்லை என்பது மன வேதனையான விடயமாகும் என காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
சிங்கள பேரினவாத அரசியல்வாதிகளும் இனவாத பிக்குகள் மற்றும் முஸ்லிம் மதவாத தரப்பினரும் வடகிழக்கு இணைப்பினை எதிர்ப்பதாகவும் அண்மையில் ஊடகசந்திப்பொன்றில் வியாழேந்தின் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் கருத்தை முற்றாக கண்டித்து காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
நமது நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்த முஸ்லிம்கள் பல்வேறு வகையான துன்பங்களையும் இன்னல்களையும் அனுபவித்தமையை இலங்கை வாழ் மக்கள் அனைவரும் அறிவார்கள்.
யுத்தத்தினால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட முஸ்லிம்களது இழப்புகளை அறிந்தும் அதனை வேண்டுமென்றே மறைத்தும் இனவாத குழுக்களின் பின்னால் மறைந்து கொண்டு தனது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்திருக்கிறார்.
வளமான நமது தேசம் இவரைப் போன்ற இனவாதிகளின் விஷமப் பிரசாரத்தினால்தான் சீரழிந்து போயிருக்கிறது என்பதே உண்மையாகும்.
கடந்த வருடங்களில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு பாரியளவில் காணிப் பிரச்சினை இருக்கிறது என்பதை ஏற்றுக் கோண்டிருக்கின்ற அதேநேரம் அவைகளைக் தீர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டும் சில அரச அதிகாரிகளின் கரிசனையின்மையினால் அவை இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதுதான் யதார்த்தம்.
உதாரணமாக மண்முனைப்பற்று பிரதேசத்தில் முஸ்லிம்கள் பரம்பரையாக வாழ்ந்த அவர்களுக்கு சொந்தமான 48 ஏக்கர் காணி இதுவரையில் அவர்களுக்கு விடுவித்துக் கொடுக்கப்படவில்லை என்பதையும் வியாழேந்திரன் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வளவு காலமும் இனவாத அரசுகளோடு ஒட்டி உறவாடி இருந்துவிட்டு இப்போது மக்கள் அவ் இனவாத ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பி இருக்கின்ற நிலையில் தனக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் அதிகாரம் ஒன்று இல்லாமல் போகும் என்ற அச்சம் அவருக்கு பீடித்திருக்கிறது.
இதுபோன்ற இனங்களுக்கிடையில் குரோதத்தை தோற்றுவிக்கின்ற கருத்துக்களை பொது வெளியில் தெரிவிப்பதை வியாழேந்திரன் முற்றாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நாம் கேட்டுக் கொள்கின்றோம்.
இரண்டாவதாக, ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருந்து யார் செயற்பட்டார்கள் என்பது மிகத் தெளிவாக தற்போது வெளிவந்திருக்கின்ற நிலையில் வெறுமனே சஹ்ரானோடு தொடர்பில்லாத ஒரு பள்ளிவாயலை அரசாங்கம் தனது தேவைக்காக பயன்படுத்துவதற்கு முயற்சிக்கின்ற நிலையில் அதனை காத்தான்குடி சமூகம் மீண்டும் எங்களுக்குத் தர வேண்டும் என்று கேட்பதில் வியாழேந்திரனுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம்.
தமிழ் மக்களுக்கு வழங்கப்படுகின்ற தீர்வு திட்டத்திற்கு முஸ்லிம்கள் எப்போதும் தடையாக இருக்க மாட்டார்கள் என்கின்ற அதேநேரம் முஸ்லிம்களுடைய பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய தீர்வாக அது இருக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பார்ப்பாகும்.
எனவே, வியாழேந்திரன் வேண்டுவது போன்று கண்டிப்பாக கிழக்கு மாகாண மக்களுடைய காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
காணிப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும். இவ்வாறான நிலையில்தான் முஸ்லிம்களுக்கு சரியான தீர்வு கிடைக்கும் என்பதிலே நாங்கள் மிக உறுதியாக இருக்கிறோம்.