அல்ஹாஜ் ஹுஸைன் ரஷாத் (ஹுஸைன் Bபோல்ட்) கடந்த 50 வருடத்திற்குள் 19 ஆயிரம் மரணங்களை இன,மத,வேறுபாடுகள் இன்றி அவரவர் மதத்திற்கு ஏற்ப அவரது சொந்த வாகனத்தில் இலவசமாக எடுத்துச்சென்று நல்லடக்கம் செய்துள்ளார்.
அவரை கௌரவிக்கும் முகமாக கடந்த 17ம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இப்புனித சேவைக்கு 50 ஜம்பதாவது வருட பூர்த்தியினை முன்னிட்டு அவரது “ஹுஸைன் ரஷாத் ஜனாஸா அறக்கட்டளையின்” சக உறுப்பினர்கள் இனைந்து அவரை கெளரவிக்கும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்தனர்.
இந் நிகழ்வில் அவரது இப்புனித சேவைகளை பாராட்டி பெளத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ ஆகிய சர்வமதங்கள் சார்பாக சர்வமதத் தலைவர்களான சாஸ்த்ரபதி கலாநிதி கலகம தம்மரன்ஸி நாயக தேரர், சாமஸ்ரீ சிவ ஸ்ரீ குமாரசாமி குருக்கள், அஷ்ஸெய்யத் கலாநிதி ஹஸன் மெளலானா அல்காதிரி மற்றும் கலாநிதி நிஷான் குரே பாதிரியார் ஆகியோர் இணைந்து பொன்னாடை போர்த்தி கெளரவித்து தத்தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாலைதீவு மற்றும் இலங்கைக்கான மலேசியா உயர்ஸ்தானிகர் கெளரவ பாதில் ஹிஷாம் அதாம் கலந்துகொண்டார்.
விஷேட அதிதிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் என்.எம்.அமீன், முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் (SLBC) அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர், சிங்கப்பூரில் இருந்து வருகை தந்த ஜக்கிய இந்திய முஸ்லிம் சங்கத்தின் தலைவர் அல்ஹாஜ் பரிஹுல்லாஹ்வும் கலந்து கொண்டதோடு இன்னும் சமூக சேவையாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
கொழும்பு மாநகரில் அநாதரவாக பாதையோரம், கடலோரம், பஸ் நிலையம், புகையிரத நிலையம், எங்கெல்லாம் அநாதை மரணங்கள் கிடக்கின்றதோ, மேல் மாகணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்கள், விமானப்படை, கடற்படை, இராணுவத்தினர் இலவச இறுதிச்சடங்கு மரணங்களை எடுத்துச் செல்வதற்கு அழைப்பது கொழும்பில் உள்ள ஹூசைன் போல்ட்டை மாத்திரமே.
ஹுஸைன் போல்ட் தனது இளமைப் பருவத்திலிருந்தே கொழும்பு பொது வைத்தியசாலையில் அநாதரவாகக் கிடக்கும் மரணங்களை அடக்கம் செய்வதற்காக அவர் இந்த புனித சேவையை ஆரம்பித்திருந்தார்.
கொரோனா (COVID-19) காலத்தில் இவர் மட்டுமே 300 கொரோனா மரணங்களை எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்துள்ளார் மற்றும் விஷேடமாக அவர் அநாதரவற்ற குடும்பங்கள், பாடசாலை மாணவ மாணவிகளுக்கும் உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.