ரயில் இயந்திர சாரதிகள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பால் பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் நாளை திங்கட்கிழமை (10) மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் (NTC) இலங்கை போக்குவரத்து சபைக்கும் (SLTB) போக்குவரத்து அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
ரயில் சாரதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 3ஆவது நாளாகவும் தொடர்கிறது.
சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு இல்லாமை உள்ளிட்ட பல பிரச்சனைகளை முன்வைத்து கடந்த 06ஆம் திகதி நள்ளிரவு 12 மணி தொடக்கம் இந்த பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
தமது பிரச்சினைகள் தொடர்பில் இதுவரையில் எந்த அதிகாரிகளும் கலந்துரையாடுவதற்கு முன்வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று காலை கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படவிருந்த 6 ரயில் சேவைகள் இரத்து செய்யப்படுவதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகளின் எண்ணிக்கை 155 ஆக பதிவாகியுள்ளது.