ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டதால் மத்திய கிழக்கு பகுதிகளில் உச்சக்கட்ட பதற்ற சூழல் நிலவி வருகிறது.
கடந்த புதன்கிழமை ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வீட்டில் இஸ்மாயில் ஹனியா படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்த கொலையை செய்தது இஸ்ரேலின் உளவு அமைப்பு மொசாட் என ஈரான் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா குறுகிய தூர ஏவுகணை ஒன்றால் கொல்லப்பட்டதாகவும் இந்த தாக்குதல் சதி திட்டத்தில் ஈரானில் உயர் பதவியில் உள்ளவர்கள் தொடர்புபட்டுள்ளதாகவும் அவர்களில் பலர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த படுகொலைச் சம்பவம் ஈரானை கொந்தளிக்க செய்தது. அதுவும் ஈரானுக்குள் நுழைந்தே ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே கொன்றதை ஈரானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதனால் இஸ்ரேலை சும்மா விடமாட்டோம். நிச்சயம் பழிதீர்ப்போம் என ஈரான் அறிவித்தது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு உரிய முறையில் கடுமையாக பழிதீர்க்கப்படும் என ஈரான் புரட்சிகர காவல் படை சபதம் எடுத்துள்ளது.
இத்தகைய சூழலில் தான் லெபனான் நாட்டில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினர் கொத்து கொத்தாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர் உள்ளனர்.
இதில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் இஸ்ரேல் – லெபனான் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது ராணுவ பலத்தை அதிகரித்துள்ளது.
ஈரான் மற்றும் அதன் ஆதரவு ஆயுதக்குழுக்களின் சாத்தியமான தாக்குதல்களில் இருந்து இஸ்ரேலைக் காக்க கூடுதல் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அந்தப் பகுதியில் நிலைநிறுத்தப் போவதாக பென்டகன் அறிவித்துள்ளது.
பதற்றம் அதிகரித்துள்ளதால் லெபனானுக்கு பல விமான நிறுவனங்கள் விமான சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்துள்ளன. சேவையைத் தொடரும் சில நிறுவனங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.
ஆனாலும் “லெபனானை விட்டு வெளியேற வணிக ரீதியான போக்குவரத்து சேவைகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன” என்று அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலைமை “விரைவாக மோசமடையக் கூடும்” என்று கூறியுள்ள பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மியும் இதேபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இரண்டு பிரிட்டிஷ் இராணுவக் கப்பல்கள் ஏற்கனவே இப்பகுதியில் உள்ளன. பிரிட்டிஷ் விமானப்படையும் போக்குவரத்து ஹெலிகாப்டர்களை தயார் நிலையில் வைத்துள்ளது.