சவேந்திர சில்வா உள்ளிட்ட நால்வர் மீது தடைவிதித்த ஐக்கிய இராச்சியத்தின் ஒருதலைப்பட்சமான முடிவு தேசிய நல்லிணக்க செயற்பாட்டை பாதிக்கும் – அரசாங்கம் அறிக்கை

Date:

முன்னாள் இராணுவப் பிரதானிகள்  மூவர் உள்ளிட்ட நால்வருக்கு தடைகளை விதிப்பதற்கு ஐக்கிய இராச்சியம் எடுத்த தீர்மானம்  ஒருதலைப்பட்சமானது என வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை இன்று சந்தித்த வௌிவிவகார  அமைச்சர் விஜித ஹேரத் இலங்கையின் நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

இலங்கையில இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது மனித உரிமைகளை மீறியமை தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக குறிப்பிட்டு ஓய்வுபெற்ற ஜெனரல் சவேந்திர சில்வா, ஓய்வுபெற்ற அட்மிரல் ஒவ் த ஃப்லீட் வசந்த கரன்னாகொட, ஓய்வுபெற்ற ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோருக்கு தடை விதிப்பதாக ஐக்கிய இராச்சியம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

இவர்களை தவிர ELLT அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் என்றழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் ஐக்கிய இராச்சியம் தடைகளை விதித்துள்ளது.

அதற்கமைய குறித்த நால்வரும் ஐக்கிய இராச்சியத்திற்கான பயணங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அந்நாட்டிற்குள் சொத்துக்களை சேகரித்து வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடுகள் மேற்கொள்ளும் இத்தகைய ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் எவ்வித ஒத்துழைப்பையும் வழங்காது என ஐக்கிய இராச்சியத்தின் இந்த தீர்மானத்திற்கு பதிலளிக்கும் வகையில் வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளை மேலும் சிக்கலுக்குள்ளாக்குவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான உள்ளகப் பொறிமுறையை வலுப்படுத்தும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதுடன் கடந்த காலத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்குமாயின் அது தொடர்பாக உள்ளகப் பொறிமுறையின் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக்கிடம் வௌிவிவகார அமைச்சில் வைத்து இன்று தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...