நாட்டில் அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக வெள்ளப்பாதிக்குள்ள மக்கள் எதிர்கொண்ட துயரத்தையும், அரசின் நிவாரண திட்டங்களை எதிர்பார்க்கும் மன நிலையும் பிரதிபலிக்கும் அற்புதமான கவிதை, புத்தளம் பிரபலக் கவிஞர் மரிக்கார் எழுதியுள்ளார்.
இது மக்கள் நெஞ்சில் எழும் பிரச்சனை, நம்பிக்கை, எதிர்பார்ப்பு மற்றும் உயிர்க்கொடை உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்துகிறது. வாசகர்களுக்காக அந்த கவிதையை இங்கு பகிர்ந்துள்ளோம், இது சமூக உணர்வையும் மனிதாபிமானத்தை மேலும் உணர வைக்கும்.
நிவாரணம்…!
வீடு வீடாகச் சென்று,
விண்ணப்பங்களை சேகரித்தபோது சந்தோஷப்பட்டேன்…!
வரிசைகள் தேவையில்லை,
‘உங்களுக்கான உதவித்தொகை வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்படும்’ என்ற அறிவிப்பில்…
உள்ளம் குளிர்ந்தேன்…!
எனினும் நேற்று…
AGA Office வாசலில் நின்ற ‘வரிசையின் நீளம்’ பார்த்தபோதுதான்…
எனக்குத் தெரிந்த பலர்… ஏன் அவ்வளவு சொல்லியும்,
அனர்த்த நிவாரணம் பெற சங்கடப்பட்டார்கள் என்ற கவலையின் கனதியை புரிந்துகொண்டேன்…!
மனித கௌரவம் என்பது மரணத்தைவிட முக்கியமானது…
இலங்கை முழுதும்…
வாழ்வில் கைநீட்டிப் பழக்கப்படாத பலர் இந்த அனர்த்தத்தில் அழிவை சந்தித்திருக்கிறார்கள்…
வழமையாக ‘கொடுக்கும்’ பலர்…
இன்று ‘எடுக்கும்’ நிலையில் என்ன செய்வதென தவித்திருக்கிறார்கள்…
காசுக்காக காத்திருப்பதை…
தனது முகம் வீதியில் தென்படுவதை… அடுத்தவர் பார்த்து ஆறுதல் சொல்வதை…
இன்னொரு அனர்த்தமாகவே அவர்களது இருதயம் உணரும்…!
போட்டோக்களில் தெரிவதை… வீடியோவில் வருவதைக்கூட…
ஒரு விஷத்தை சகித்துக்கொள்ளும் கஷ்டத்துடனேயே கடந்துசெல்லும்…!
அரச அதிகாரிகளே…
தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது…தொடர்பாடல் விரிந்திருக்கிறது…
வீதியில் நிற்காமல்…
இவர்களுக்கு ஒரு விதி செய்ய முடியாதா…?
நிழல்களை வெட்டாமல் நிவாரணம் வழங்கும்
ஒரு சிஸ்ட்டத்தை சட்டமாக்கமுடியாதா..?
இதயம் உள்ளவர்களே…
இந்த இழி நிலை மாற்றப்பட வேண்டும்…!
அன்பும் அரவணைப்பும் கண்ணியதோடு கையளிக்கப்படும் கலாச்சாரம் வளர்க்கப்பட வேண்டும்…!
அரச நிறுவனங்களோ, தனியார்களோ… தமது சேவை விலங்குகளுக்கல்ல…
உள்ளம் உள்ள மனிதர்களுக்கானது என்பதை மனதில் கொள்ளவேண்டும்…!
புத்தளம் மரிக்கார்
