நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Date:

மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

மேலும், சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலிய, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வடமாகாணத்திலும் மழையுடனான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்குமலை சரிவுகளில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமெனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், வடக்கு, வடமேற்கு, வடமத்திய, மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பிராந்தியத்தின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், காங்கேசன்துறை முதல் மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை பொத்துவில் வரையிலான கடற்பிராந்தியங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமெனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, நுவரெலிய, கொழும்பு மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலக பிரிவிற்கும், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் தெரணியகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்த, கலவான, அயகம, கொடக்கவெல மற்றும் நிவித்திகலை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

இந்த நிலையில், கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க பிரதேச செயலக பிரிவுகளுக்கும், காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பிரதேச செயலக பிரிவிற்கும், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர, அஹலவத்த, வலல்லாவிட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

அத்துடன், நுவரெலிய மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலக பிரிவுக்கும், மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர பிரதேச செயலக பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன, எலபாத்த ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

ஆகவே, குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் மண்மேடு சரிந்து விழுதல், நிலம் தாழிறங்குதல் மற்றும் மரங்கள் முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.

இதேவேளை, மத்திய மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் பெய்து வரும் அடை மழை காரணமாக பல்வேறு நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

தலவாக்கலை – மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகளும், விமலசுரேந்திர நீர் தேக்கத்தின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கென்னியன், லக்சபான ஆகிய நீர்தேக்கங்களில் தலா ஒவ்வொரு வான் கதவுகள திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த, நீர்தேக்கங்களை அண்மித்து தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, இதனிடையே சீரற்ற வானிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக பாணத்துகம பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் களனிகங்கை, களு கங்கை, கின் கங்கை ஆகியவற்றின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது.

இதனால் குறித்த ஆறுகளை அண்டிய பகுதிகளில் வாழும் மக்களை வெள்ள அனர்த்தங்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்க்பட்டுள்ளது.

இதேவேளை, சீரற்றவானிலையினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன், ஆயிரத்து 403 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 777 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.

இதில் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் பாதிக்க்பட்டுள்ளனர்.

இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரத்து 6 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 994 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.

அத்துடன், கண்டி மாவட்டத்தில் 265 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 246 பேர் பாதிக்க்பட்டுள்ளனர்.

மேலும், ஒரு வீடு முழுமையாகவும், 142 வீடுகள் பகுதியளவிலும் பாதிக்க்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...