சர்வதேச ரீதியில் வேறு எங்கும் நடைமுறைப்படுத்தப்படாத கருப்பொருளின் அடிப்படையில் நாட்டில் பொதுச் சட்டத்தை நிறுவுவதற்கான அடித்தளத்தை அமைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சியை பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழு பாராட்டியுள்ளது.
‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி நேற்றையதினம் (19) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பல்கலைக்கழக சமூகத்தின் கருத்துக்களைக் கேட்டறிந்ததுடன், ஆலோசனைகளின் போதே பல்கலைக்கழக பேராசிரியர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
கொழும்பு, ருகுணு, ஜயவர்தனபுர, யாழ்ப்பாணம், தென்கிழக்கு, பேராதனை, களனி, ரஜரட்டை, வயம்ப உள்ளிட்ட 18 பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்கலைக்கழக வேந்தர்கள், வைத்தியர்கள், பேராசிரியர்கள், அறிஞர்கள் உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டன.
இதன்போது, பல்கலைக்கழக சமூகத்தினால் பல யோசனைகளும் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டதுடன், செயலணியின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் உரையாற்றினார்.
‘ஏகாதிபத்தியங்களால் எம்மிடமிருந்து பறிக்கப்பட்ட நாட்டை அனைவரும் ஒற்றுமையாக மீட்டெடுக்க வேண்டும்’ என தேரர் தெரிவித்தார்.
அடிமட்ட மட்டத்தில் உள்ள பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கு புதிய அணுகுமுறையாக செயலணி முன்னோக்கிச் செல்வதாகத் தெரிவித்த தேரர், அவற்றை வெற்றியடையச் செய்வதற்கு தியாகங்களைச் செய்ய வேண்டியிருப்பதால் நல்ல நோக்கங்களை புத்தகங்களில் எழுதுவது போதாது என்றும் கூறினார்.
பயங்கரவாதத்தை தோற்கடித்தாலும் பிரிவினைவாத எண்ணத்தை தோற்கடிக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுடன் இணைந்து கடுமையாக உழைக்க தமது குழு தயாராக இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஒரு சமூகத்திற்கோ அல்லது குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கோ அநீதி இழைக்கும் வகையில் சட்டங்களில் ஏதேனும் முரண்பாடுகள் இருப்பின் அந்த சட்டங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டுமென கொழும்பு சட்ட பீடத்தின் பேராசிரியர் வசந்த செனவிரத்ன தெரிவித்தார்.
அரசியலமைப்பு ஒரு மாய ஆவணம் அல்ல. அடிப்படை சட்டக் கருத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. அந்தக் கருத்தைப் புரிந்துகொண்டு, ஒற்றைச் சட்டத்தின் கீழ் ஆட்சி செய்யும் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம் என்றார்.
இதேவேளை பல்கலைக்கழக மாணவர்களும் செயலணிக்கு முன்பாக தமது கருத்துக்களை வெளிப்படுத்தியதுடன் மாறிவரும் உலகத்திற்கு ஏற்ப சட்டங்களும் புதுப்பிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார்கள்.
இது தொடர்பாக தேவையான பொறிமுறையை இந்த செயலணி முன்மொழியும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர். ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற எண்ணக்கருவை நோக்கிய பயணத்தில் போதிய சட்ட அறிவு இல்லாதது பிரச்சினையாக உள்ளதை சுட்டிக்காட்டிய மாணவர்கள் அதனை தேசிய கல்விக் கொள்கையின் ஊடாக சரி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.