கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பெட்ரோலிய எரிவாயு தீர்ந்துவிட்டதாகக் கூறப்படும் செய்திகள் உண்மையில்லை என குறித்த வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டால் பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் பாதிக்கப்படும் பின்னணியில் இந்த குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.
எரிவாயு பற்றாக்குறையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவு தயாரிக்க விறகு அடுப்புகளைப் பயன்படுத்தியதாக கடந்த வாரம் பல செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் தேசிய வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி குமார விக்கிரமசிங்க குறிப்பிடுகையில்,
இவ்வாறான செய்திகள் போலியானவை எங்களுக்கு இன்னும் எரிவாயு தீரவில்லை. இந்த செய்தி அறிக்கைகள் எங்கிருந்து வந்தன என்று தெரியவில்லை. எங்களிடம் இன்னும் தேவையான எரிவாயு உள்ளது,’ என்று அவர் விளக்கினார்.
மேலும் தற்போதுள்ள எரிவாயு விநியோகத்தில் மருத்துவமனைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதால், வைத்தியசாலைக்கு வழங்குவது நிறுத்தப்படாது என அவர் உறுதியளித்தார்.
எவ்வாறாயினும் அண்மையில் நாடு முழுவதும் நிலவும் கடும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சமையல் அறையிலும் விறகு அடுப்பு தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
சமையல் எரிவாயு இல்லை என்பதால், நோயாளிகள் உணவகம் அல்லது வெளியில் உள்ள உணவங்களில் உணவை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால், விறகு அடுப்பையாவது தயார் செய்து உணவை சமைத்து கொடுப்பது முக்கியம் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அந்த வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.