நமது நாடு தற்போது இக்கட்டான கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதிலிருந்து நாட்டை கட்டியெழுப்ப சர்வதேசத்தின் ஆதரவு தேவை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் பல நாடுகளின் தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.
இந்த சந்திப்பில் H. E.Juma Alshihhi, குவைட் நாட்டுத் தூதுவர் H.E. Mr. Khalaf Bu Dhhair, இந்தோனோசிய நாட்டுத் தூதுவர் H.E. Mrs.Dewi Gustina Tobing, பாகிஸ்தான் நாட்டுத் தூதுவர் Umar Farooq Burki, துருக்கி நாட்டுத் தூதுவர் Demet Sekercioglu, பாலஸ்தீன நாட்டுத் தூதர் Zuhair Zair, மாலைதீவு நாட்டின் தூதுவர் Yang Thai Tan ஆகிய தூதுக்குழுவினர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது, நாட்டில் நிலவும் நெருக்கடி காரணமாக ஒட்டுமொத்த சமூகமும் பெரும் சிரமங்களை அனுபவித்து வருவதாகவும் நாட்டை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இனவாதம், மதவாதம் மற்றும் பிரிவினைவாதம் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது ஐக்கிய மக்கள் சக்தி அனைத்து மனித உரிமைகளுக்காகவும் முன் நிற்கிறது எனவும் சஜித் தெரிவித்தார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச பலஸ்தீனம் தொடர்பாக கொண்டிருந்த நிலைப்பாட்டை தாம் பாராட்டுவதாகவும் மதிப்பதாகவும் பலஸ்தீனத் தூதுவர் சுஹைர் செய்த் இதன் போது தெரிவித்தார்.
இராஜதந்திர ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.