நாட்டின் பல்வேறு பாகங்களில் இருந்தும் கொழும்புக்கு வந்து வயிற்றுப் பிழைப்புக்காக ஆட்டோ ஓட்டும் பலர் உள்ளனர்.
இவர்களைத் திட்டமிட்டு ஏமாற்றும் இளைஞர்களைக் கொண்ட ஒரு கூட்டம் கொழும்பில் செயல்பட்டு வருவது அண்மைக் காலங்களில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக கொழும்பின் சன நெரிசல் மிக்க பகுதிகளிலும் கொழும்பை அண்டிய பகுதிகளிலும் இந்த ஏமாற்று மோசடி இடம்பெற்று வருகின்றது.
வௌ;வேறு இடங்களில் இருந்து குறிப்பிட்ட இடங்களுக்கு ஆட்டோக்களை வாடகைக்கு அமர்த்தி வந்து, ஒரு குறிப்பிட்ட இடத்தில் இளைஞர்கள் இறங்குகின்றார்கள்.
தனியாகவும் சில வேளைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களும் இவ்வாறு வருகின்றனர். இவர்கள் குறிப்பிட்ட ஆட்டோக்களில் இருந்து இறங்கும் பகுதி சந்து பொந்தான அல்லது மூலை முடுக்கான பகுதிகள்.
இதில் ஒரு இடத்தில் இருந்து இறங்கி ஒரு ஒழுங்கைக்குள் அல்லது முடுக்குகளுக்குள் புகுந்து விட்டால் வேறு எங்காவது ஒரு இடத்தில் போய் நிற்கலாம், அல்லது நெருக்கமான விதத்தில் வீடுகளைக் கொண்டுள்ள இந்தப் பகுதிகளில் அவர்களின் வீடுகளுக்கே சென்று பதுங்கி விடலாம்.
பிறகு அந்த நபரை தேடிப் பிடிப்பது என்பது முற்றிலும் முடியாத காரியம். அதிலும் இந்தப் பகுதி முடுக்குகள் பற்றி அறியாத வெளிநபர்களால் இது முற்றிலும் முடியாத காரியம்.
தொடர் மாடிகளுக்குள் பிரவேசித்தால் அவர் எந்த புளொக்கில் எத்தனையாவது மாடிக்கு சென்றார் என்பதை கண்டு பிடிக்கவே முடியாது.
தமது இந்த வதிவிட சூழலை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தும் மோசடி நபர்கள் குறிப்பிட்ட இடத்தில் இறங்கி ஏதாவது சாக்கு போக்கு சொல்லி கொஞ்சம் நில்லுங்கள் அதோ வீடு உள்ளது பணத்தை எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு ஒரு ஒழுங்கைக்குள் சென்று விடுகின்றார்கள்.
விஷயம் தெரியாமல் மாட்டிக் கொள்ளும் ஆட்டோ சாரதிகள் நீண்ட நேரம் காத்து நின்ற பின்புதான் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அதன் பிறகு சம்பந்தப்பட்ட நபர்களைக் கண்டு பிடித்து பணம் வசூலிப்பது கனவிலும் முடியாத காரியம்.
சில நேரங்களில் ஆட்டோவில் வரும் நபர்கள் தமது தொலைபேசியில் சிக்னள் இல்லை கொஞ்சம் தொலைபேசியைத் தாருங்கள் எனக் கேட்டு பேசுவது போல் நடித்து தொலைபேசியுடன் மாயமான சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. பொலிஸில் சென்று முறையிட்டால் அதிலும் எந்தப் பயனும் இல்லை.
பலர் இவ்வாறு செயற்படுவதால் எவர் எங்கு சென்றார் என்பதை தங்களால் கூட கண்டு பிடிக்க முடியாது உள்ளதாக பொலிஸார் கையை விரித்து விடுகின்றனர்.
எனவே இந்தப் பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றி வரும் ஆட்டோ சாரதிகள் இளைஞர்கள் கூட்டமாக ஏறினால் அவர்களைத் தவிர்த்துக் கொள்வதே நல்லது. குடும்பமாக ஏறுகின்றவர்கள் இவ்வாறு மோசடிகளில் ஈடுபடுவது இல்லை அல்லது மிக மிக குறைவு.
எனவே ஆட்டோ சாரதிகள் அவதானமாக நடந்து கொள்ளுமாறு இப்பிரதேசங்களில் வாழும் நல்ல உள்ளம் கொண்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.