முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியுடன் போராடி வரும் இலங்கையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் காப்பாற்றுவதற்கும் அவசர மருத்துவப் பொருட்கள் தேவை என்று இலங்கையின் குழந்தை நிபுணர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக தெ ஹிந்து தெரிவித்துள்ளது.
இதன்படி முக்கியமான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன், எண்டோட்ராயல் (ET) குழாய்கள் போன்ற உடனடி நன்கொடைகளை அவர்கள் எதிர்பார்ப்பதாக தெ ஹிந்து குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டில் உள்ள தமது சகாக்களுக்கு இந்த முக்கியமான செய்தியை அவர்கள் அனுப்பியுள்ளனர்.
இலங்கையின் மருத்துவமனை அமைப்பில் பல விடயங்கள் குறைவாக உள்ளன இதில் குறிப்பாக புதிதாகப் பிறந்த குழந்தைகளை காற்றோட்டம் செய்ய எண்டோட்ராயல் குழாய்களின் பற்றாக்குறை குறித்து குழந்தை மருத்துவ நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மருத்துவமனைகளில் இருக்கும் கையிருப்பு மிக விரைவில் தீர்ந்துவிடும் என்று அரசத் துறையில் சேவையாற்றும் மூத்த குழந்தை மருத்துவ நிபுணர் சமன் குமார கூறியுள்ளார்.
எனவே பிறந்த குழந்தை பராமரிப்புக்கான பொருட்களை அனுப்ப வெளிநாட்டில் உள்ள தமது நண்பர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பற்றாக்குறை காரணமாக ET குழாய்களை மீண்டும் பயன்படுத்தும் நிலைக்கு வந்து விட்டதாக தெரிவித்துள்ள சமன் குமார நிலைமையை மோசமானது என்று விபரித்துள்ளார். கண்டி வைத்தியசாலையில் மயக்க மருந்து மீட்பு மருந்துகள் தீர்ந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில தினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இங்கு மருந்துகள் இல்லை போன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஏந்தியவாறு வீதிக்கு வந்தனர்.
இதேவேளை நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இனி இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவக் கருவிகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை பெறமுடியாது என்று இலங்கை மருத்துவ சங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் யாருக்கு சிகிச்சை வழங்கவேண்டும், யாருக்கு சிகிச்சை தேவையில்லை என்பதை தீர்மானிக்கும் நிலைக்கு வந்துவிட்டதாக மருத்துவ சங்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.