முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து வெளியே அனுப்புமாறு கோரி திருகோணமலை கடற்படை முகாமிற்கு முன்பாக மக்கள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
திருகோணமலை கடற்படை முகாமிற்கு முன்பாக தற்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு கோசங்களை எழுப்பி வருகின்றனர்.
குறித்த முகாமை சூழவுள்ள பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி அல்லது பிரதமர் வரும்போது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பைப் போன்றே பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை கொழும்பு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்துடன் இணைந்த இளைஞர்கள் குழுவொன்று, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயிலை மறித்து, பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுத்துள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
விமான நிலைய நுழைவாயிலை இளைஞர்கள் வாகனங்களுடன் முற்றுகையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்களையடுத்து விமான நிலையங்களுக்கு அருகில் மக்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வழியால் விமான நிலையத்திற்குள் செல்லும் அனைத்து வாகனங்களையும் பரிசோதிக்கும் அவர்கள் உள்ளே யார் இருக்கின்றார்கள் என்று சோதனையிட்ட பின்னரே அனுப்பி வைக்கின்றனர்.
இதேவேளை கொழும்பு இரத்மலானை விமான நிலையம், மத்தளை விமான நிலையம் ஆகிய பகுதிகளிலும் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதேநேரம் கொழும்பு பொலிஸ் மைதானத்தில் இருந்து உலங்கு வானூர்த்தி ஒன்று சிலரை ஏற்றிக்கொண்டு அவசரசமாக செல்லும் காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.