இன்று நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள ஹர்த்தாலை முன்னிட்டு அமைதியான போராட்டங்களில் ஈடுபடுமாறு பொதுமக்களிடம் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேநேரம், வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வணிக நிறுவனங்களை மூடுமாறு மிரட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நாடளாவிய ரீதியில் இன்று நடைபெறவுள்ள ஹர்த்தால் பிரச்சாரம் தொடர்பில் பொலிஸார் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளனர்.
அரசியலமைப்பின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பல்வேறு உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை அனுபவிப்பதை இலங்கை பொலிஸ் என்றும் தடையாக இருக்காது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமைகளை அனுபவிக்கிறோம் என்ற போர்வையில், பிற குடிமக்களின் உரிமைகளை நசுக்குவதன் மூலம் கருத்துச் சுதந்திரத்தை மீறக்கூடாது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும், ஹர்த்தால் போராட்டத்தில் இணைந்து கொள்ள விரும்பாத குழுக்களை இயக்கத்தில் இணைத்துக்கொள்ளுமாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதுடன், தமது வர்த்தக நிலையங்களை திறக்க வேண்டாம் என அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அவ்வாறானவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.