கஞ்சிபானை இம்ரான் என்ற முகமது நஜீம் முகமது இம்ரான் தமிழகத்தின் ராமேஸ்வரத்துக்கு தப்பிச் சென்றதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் டிசம்பர் 25 கடல் மார்க்கமாக ராமநாதபுரம் மாவட்டத்துக்குச் சென்றதாகவும், அவரையும் அவரது கூட்டாளிகளையும் கண்காணிக்கும்படி தமிழக உளவுத்துறை மாநில பொலிஸாரை எச்சரித்ததாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
போதைப்பொருள் வர்த்தகத்தின் சக்திவாய்ந்த உறுப்பினரும், கொலை, கொலைச் சதி போன்ற குற்றங்களுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாதாள உலகத் தலைவருமான கஞ்சிபானை இம்ரான் டிச. கடந்த 20ம் திகதி பிணையில் வெளிவந்தார்.
விசாரணையின் போது கெசல்வத்தை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிரதான நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சந்தேகநபர் 50 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொலை, கொலைகள் மற்றும் திட்டமிட்ட பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த கஞ்சிபானை இம்ரான், 2019ஆம் ஆண்டு துபாயில் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டார்.
பின்னர் அவர் பிணையில் வெளிவரும் வரை சிறையில் அடைக்கப்பட்டார். பிணையில் வெளிவந்த அவர் இந்தியாவிற்குள் நுழையத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை மற்றும் நம்பகமான ஆதாரங்களில் இருந்து தமிழக உளவுத்துறைக்கு குறிப்பிட்ட தகவல் கிடைத்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து பிணை பெற்று நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய அவர் தலைமன்னாருக்குச் சென்றதாகவும், அங்கு அவரது கூட்டாளிகள் இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கஞ்சிபானை இம்ரான் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றமை தொடர்பில் இலங்கை உத்தியோகபூர்வமாக பதிலளிக்காவிட்டாலும், அவரது முயற்சி தொடர்பில் உளவு அமைப்புகளுக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் ‘தி இந்து’ சுட்டிக்காட்டியுள்ளது.