உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான பணத்தை பெற்றுக் கொள்வதற்கு தலையிடுமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழு தமக்கு அனுப்பிய கடிதம் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களிடம் சமர்ப்பித்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கடிதம் அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டத்தில் தமக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அக்கடிதத்தின் ஊடாக பாராளுமன்றம் மேற்கொள்ளக்கூடிய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் கட்சித் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சபாநாயகர் கடிதத்தின் பிரதியை நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் பாராளுமன்றம் மேற்கொள்ளக்கூடிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து கட்சித் தலைவர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதாக மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை விடுவிப்பதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவும் கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இது தொடர்பான கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்து உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை பெற்றுக் கொடுப்பதில் தலையிடுமாறு அண்மையில் கோரிக்கை விடுத்துள்ளார்.