கட்டான – ஹல்பே – கோபியவத்த பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையின் நிர்வாக பணிப்பாளர் கல்ஃபான் அல் ஒபைதானி என்பவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணை படல்கம பொலிஸாரிடமிருந்து நீக்கப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
படல்கம பொலிசார் இந்த சம்பவத்திற்கு நீதி வழங்கவில்லை எனவும், இந்த சூழ்நிலையில் தொழிற்சாலையொன்றை வெளிநாட்டுக்கு மாற்ற நிர்வாகம் தீர்மானித்துள்ளதாகவும் ஓமானிய தூதுவர் அரசாங்கத்திற்கு அறிவித்ததை அடுத்து இந்த பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இருவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 30ஆம் திகதி ஆடைத்தொழிற்சாலையின் உரிமையாளர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது சிலர் தாக்குதல் நடத்தியதுடன் அவரது சொத்துக்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த விசாரணைகள் உரிய முறையில் நடைபெறவில்லை என உரிமையாளர்கள் ஓமானிய தூதுவர் ஊடாக இந்நாட்டு வெளிவிவகார அமைச்சருக்கு அறிவித்திருந்ததுடன் நீதி கிடைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுவோம் என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த கும்பல்களால் தாங்கள் தொடர்ந்து துன்புறுத்தலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி வருவதாக ஆடைத் தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தாக்கப்பட்ட கல்பான் ஒபைதானி (55 வயது) தற்போது ஸ்ரீ ஜெயவர்தன புர மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.