அமானா வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் உப தலைவர் சித்தீக் அக்பர், மாற்று நிதிச் சேவை நிறுவனங்களின் சம்மேளனத்தின் (AAFI) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமையை அமானா வங்கி கௌரவித்துள்ளது.
வட்டிசாராத இஸ்லாமிய வங்கிகள் பிரிவில் சித்தீக் கொண்டுள்ள தலைமைத்துவத்தை உறுதி செய்யும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தின் போது இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது.
சந்தைப்படுத்தல் மற்றும் கூட்டாண்மை தொடர்பாடல்கள் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளர் எனும் நிலையில் அமானா வங்கியுடன் சித்தீக் இணைந்து கொண்டதுடன், பின்னர் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் உப தலைவராக அவர் பதவி உயர்வு பெற்றிருந்தார்.
அமானா வங்கியுடன் இணைந்து கொள்வதற்கு முன்னதாக, நிதி, தொலைத்தொடர்பாடல் மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் போன்ற துறைகளில் சந்தைப்படுத்தல் முகாமையாளர் மற்றும் வர்த்தக நாம முகாமையாளர் எனும் பதவிகளை இவர் வகித்துள்ளார். இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தின் பொருளாளராகவும் சித்தீக் செயலாற்றியுள்ளார்.
அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.