டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டைப் பகுதிக்கு அருகே இன்று நடந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். காவல்துறை “பயங்கரவாத எதிர்ப்பு” சட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
இது, அம்மோனியம் நைட்ரேட் எரிபொருளை பயன்படுத்தி நடத்தப்பட்ட பயங்கரவாத சதி எனத் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தேசியத் தலைநகர் டெல்லி உட்பட மும்பை, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உயர் அவசர நிலையை (High Alert) ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில், காரின் உரிமையாளர் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த மருத்துவர் முகமது உமர் என்பது தெரிய வந்தது. உமர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து காரில் டெட்டனேட்டரை வைத்து வெடிக்கச் செய்தது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
குண்டுவெடிப்புக்கு முன், கார் சுமார் 3 மணி நேரம் செங்கோட்டைக்கு அருகிலுள்ள சுனேஹ்ரி மசூதி அருகே நிறுத்தப்பட்டிருந்ததும் சிசிடிவியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கார் முதலில் முகமது சல்மான் என்பவருக்குச் சொந்தமானது என்றும், பின்னர் பல்வேறு நபர்களுக்கு கைமாறி உமரைச் சென்றடைந்ததும் தெரியவந்துள்ளது. இந்தச் சங்கிலித் தொடர்பில் இருந்த முகமது சல்மான் மற்றும் சந்தேகத்திற்குரிய மேலும் 13 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த தாக்குதலின் எதிரொலியாக நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
