இலங்கைக்கான அரபு நாடுகளின் தூதுவர் பேரவையின் உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழல் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மத்திய கிழக்கில் விரைவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படுவதே இலங்கையின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி தெரிவித்தார்.
சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு, இப்பிராந்தியத்தின் பாதுகாப்பிற்காக இலங்கை தனது முழுமையான ஒத்துழைப்பை தனிநாடாகவும், சர்வதேச நாடுகளுடன் இணைந்தும் வழங்கும் என அவர் உறுதியளித்தார்.
போரில் நேரடியாக ஈடுபடாத மத்திய கிழக்கு நாடுகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனத் தெரிவித்த ஜனாதிபதி, இது குறித்துத் தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்தார்.
இலங்கையின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறையில் அரபு நாடுகள் வழங்கி வரும் பங்களிப்பிற்கும் ஜனாதிபதி தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
போர்ச் சூழலிலும் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளை ஜனாதிபதி இதன்போது வெகுவாகப் பாராட்டினார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அமைதி என்பது உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மிக முக்கியமானது என்பதை இந்தச் சந்திப்பின் போது இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.
