இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறைக்கு சர்வதேச மட்டத்திலான வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கீகாரம் கிடைத்துள்ளது.
தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி (HIV) மற்றும் சிபிலிஸ் (Syphilis) போன்ற கொடிய நோய்த்தொற்றுகள் பரவுவதைப் பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக இல்லாத அளவிற்குப் பாரியளவில் கட்டுப்படுத்தி, அதனைத் தொடர்ச்சியாகப் பேணி வந்தமைக்காக உலக சுகாதார அமைப்பு (WHO) இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக விசேட பாராட்டுச் சான்றிதழை வழங்கி கௌரவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் 79ஆவது உலக சுகாதாரப் பேரவைக் கூட்டத்தொடரின் (79th World Health Assembly) போது, இன்று (19) இந்த உயரிய பாராட்டுச் சான்றிதழ் இலங்கையிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கடுமையான சர்வதேச தரநிலைகள் மற்றும் உலகளாவிய ஆலோசனைக் குழுவின் (Global Advisory Committee) பரிந்துரைகளுக்கு இணங்க, இலங்கை இந்த மைல்கல் சாதனையை எட்டியுள்ளது.
கர்ப்பிணித் தாய்மார்களிடமிருந்து பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த நோய்கள் பரவாமல் தடுப்பதில் இலங்கை அடைந்துள்ள அசாதாரண முன்னேற்றத்தைப் பாராட்டும் முகமாகவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் (Dr. Tedros Adhanom Ghebreyesus) அவர்களினால், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாராட்டுச் சான்றிதழ் இலங்கையின் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் அதிகாரப்பூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
