இலங்கையில் பாலியல் நோய்கள் மற்றும் HIV பரவல் நிலவரம் குறித்து ஆராய்ந்து, அதனைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டத்தைப் பலப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று ஜூன் 24 ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அமைச்சரவை அமைச்சர்கள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மகளிர், சிறுவர் விவகார அமைச்சின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலில் முக்கியமாக பின்வரும் விடயங்கள் குறித்து விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது:
HIV மற்றும் பாலியல் நோய்த் தடுப்பில் தற்போதைய சூழலில் எதிர்கொள்ளப்படும் சவால்களைக் கண்டறிதல்.
HIV பரவுவதைத் தடுத்தல், ஆரம்பத்திலேயே நோய் கண்டறிதல், முறையான சிகிச்சை மற்றும் நோயாளிகளுக்குத் தேவையான பராமரிப்புச் சேவைகளை நாடு தழுவிய ரீதியில் விரிவுபடுத்துதல்.
HIV தொற்றுக்குள்ளானவர்கள் குறித்து சமூகத்தில் நிலவும் தவறான அவதூறுகள் மற்றும் பாகுபாடுகளைக் களைவதற்கான நடைமுறைச்சாத்தியமான பரிந்துரைகளைத் தயாரித்தல்.
நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், HIV தடுப்பிற்கான தேசிய வேலைத்திட்டத்தை மேலும் வலுவான முறையில் முன்னோக்கி எடுத்துச் செல்வது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
