ரஷ்யாவில் (LGBT) இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையின் கீழ் தொடரப்பட்ட முதல் வழக்கில், இரவு நேர விடுதி ஒன்றின் உரிமையாளர் மற்றும் இரு ஊழியர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ரஷ்யாவின் தென்மேற்கு நகரான ஓரன்பர்க்கில் உள்ள ‘போஸ்’ (Pose) என்ற எல்ஜிபிடி இரவு நேர விடுதியில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறை அதிரடி சோதனை நடத்தியது.
இச்சோதனையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூன்று பிரதிவாதிகளும், மாஸ்கோவால் தடை செய்யப்பட்ட “தீவிரவாத அமைப்பின்” நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து அதில் பங்கேற்றதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விடுதியின் உரிமையாளரான 37 வயது வயாசெஸ்லாவ் காசனோவ் என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 1 மில்லியன் ரூபிள் (சுமார் $12,755 டாலர்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
விடுதியின் மேலாளரான 30 வயது டயானா காமிலியானோவா (Diana Kamilyanova) என்பவருக்கு 6 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கலை இயக்குநரான 23 வயது அலெக்சாண்டர் கிளிமோவ் என்பவருக்கு 2 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் இந்த மூன்று பேரும் மறுத்துள்ளனர்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆட்சியின் கீழ், எல்ஜிபிடி உரிமைகளுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் ரஷ்யாவின் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள், தேசம் மற்றும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் “மேற்கத்திய கண்டுபிடிப்புகள்” என்று ரஷ்யா சித்தரித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 2023 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் உச்ச நீதிமன்றம் “எல்ஜிபிடி இயக்கத்தை” ஒரு தீவிரவாத அமைப்பாக அறிவித்தது.
மேலும், இதற்கு ஆதரவளிப்பவர்கள் பயங்கரவாதிகளாகக் கருதப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன் விளைவாகவே, எல்ஜிபிடி சமூகத்தினர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் மீது தற்போது கடுமையான கிரிமினல் வழக்குகள் பாய்ந்து வருகின்றன.
ஏற்கனவே, எல்ஜிபிடி தொடர்பான உள்ளடக்கங்களை ஒளிபரப்பும் இசை மற்றும் திரைப்பட இணையதளங்களுக்கு ரஷ்யாவில் தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நீதிமன்றம் கூறுகையில், “பிரதிவாதிகள் மூவரும் இரவு நேர விடுதி நடத்துவது என்ற போர்வையில், பாரம்பரியமற்ற பாலியல் ஈர்ப்பு உடையவர்களோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையிலான நிகழ்வுகளைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்துள்ளனர்” என்று குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்யாவின் எல்ஜிபிடி உரிமைக்கான வழக்கறிஞர்கள், இந்த ஓரன்பர்க் தீர்ப்பு வருங்காலத்தில் எல்ஜிபிடி சமூகத்தினருக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கு ஒரு முன்மாதிரியாக (Precedent) அமையும் என்றும், ரஷ்யாவில் அவர்களுக்கான பாதுகாப்பான புகலிடங்களை முற்றிலும் அழித்துவிடும் என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.
