அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த ஜூலை மாதம் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் பங்கேற்றுவிட்டுத் திரும்பியபோது, ஈரானின் ஏவுகணை மற்றும் படுகொலை அச்சுறுத்தல் காரணமாக ரகசிய இராணுவ விமானம் மூலம் பிரிட்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ மற்றும் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டிரம்ப் வழக்கமான ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ (Air Force One) விமானத்தில் பயணம் செய்வதாக உலகிற்கு வெளி காட்டப்பட்ட போதிலும், அவர் உணவு மற்றும் பொருட்களை ஏற்றப் பயன்படுத்தப்படும் விமான நிலைய உணவக லாரி (Catering Truck) மூலம் ரகசியமாக வேறொரு சிறிய விமானத்திற்கு மாற்றப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
துருக்கி மற்றும் ஈரானுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்திருந்த சூழலில், டிரம்ப் பயணிக்கும் விமானத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க உளவுத்துறைக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்தன.
பொதுமக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்ப, துருக்கித் தலைநகர் அங்காராவில் ஊடகக் கேமராக்களுக்கு முன்னதாக பழமையான ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ போயிங் 747 விமானத்தில் டிரம்ப் ஏறுவது போல் காட்டப்பட்டது.
விமானத்திற்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே, விமானத்தின் பின்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஹைட்ராலிக் உணவக லாரி வழியாக டிரம்ப் ரகசியமாக இறக்கப்பட்டு, அருகில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய ‘சி-32ஏ’ (C-32A) இராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்டார்.
டிரம்ப் இல்லாத போதிலும், அவர் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில்தான் பயணிக்கிறார் எனச் செய்தியாளர்கள் மற்றும் வெள்ளை மாளிகை ஊழியர்கள் நம்ப வைக்கப்பட்டனர். விமானத்தின் ஜன்னல் திரைச்சீலைகளை மூடுமாறு செய்தியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
இரண்டு விமானங்களும் பிரிட்டனில் உள்ள ‘ஆர்.ஏ.எஃப் மில்டன்ஹால்’ (RAF Mildenhall) விமானப்படை தளத்தை அடைந்தன. அங்கு ரகசிய விமானத்திலிருந்து இறங்கிய டிரம்ப், மீண்டும் பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திற்குள் சென்று, வழக்கம்போல அதன் படிகள் வழியாக வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.
வெள்ளை மாளிகையின் விளக்கம்
இச்சம்பவம் தொடர்பாகப் பேசிய வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீவ் செங் (Steve Cheung), “அமெரிக்க அதிபருக்கு உலகளவில் பல எதிரிகள் உள்ளனர். அவருடைய பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான அனைத்து உத்திகளையும் பாதுகாப்பு படையினர் பயன்படுத்துவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2000-ஆம் ஆண்டில் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் பாகிஸ்தான் சென்றபோதும் இதேபோல ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானத்தை ஏமாற்றுப் பொருளாகப் பயன்படுத்தி, வேறொரு ரகசிய விமானத்தில் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
