நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ‘ஜின்னா’ மாநாட்டு மையத்தில் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு குறித்த சர்வதேச மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
பாகிஸ்தான் அரசின் மத விவகாரங்கள் மற்றும் மதநல்லிணக்க அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இம்மாநாட்டில், நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மார்க்க அறிஞர்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.
“நபிகளாரின் வாழ்வியல் வெளிச்சத்தில் புதிய தலைமுறையைப் பாதுகாத்தலும் கட்டியெழுப்புதலும்” எனும் கருப்பொருளில் இம்மாநாடு நடைபெற்றது. இதில் இளைஞர்களின் சிந்தனை, ஒழுக்கம் மற்றும் சமூக வளர்ச்சியை நபிகளாரின் வழிகாட்டலில் எவ்வாறு சீரமைப்பது என்பது குறித்தும், இஸ்லாமிய நெறிமுறைகளுடன் அவர்களை எவ்வாறு பிணைப்பது என்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
இம்மாநாட்டின் தலைமை விருந்தினராக பாகிஸ்தான் பிரதமர் முஹம்மது ஷாபாஸ் ஷெரீப் கலந்துகொண்டார்.
மத விவகாரங்கள் மற்றும் மதநல்லிணக்க அமைச்சர் சர்தார் முஹம்மத் யூசுஃப் மாநாட்டு ஏற்பாடுகளை முன்னின்று நடத்தினார்.
மேலும், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் நாட்டின் முன்னணி மார்க்க அறிஞர்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.
மாநாட்டில் உரையாற்றிய அறிஞர்கள், இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் சித்தாந்த மற்றும் சமூக சவால்களுக்கு நபிகளாரின் வாழ்வியலே சிறந்த தீர்வாக அமையும் எனச் சுட்டிக்காட்டினர்.
பாகிஸ்தான் மத்திய பிறை பார்வைக் குழுவின் தலைவரும், லாகூர் பாட்ஷாஹி பள்ளிவாசலின் தலைமை இமாமுமான மௌலானா முஹம்மது அப்துல் கதீர் ஆசாத் பேசுகையில், இளைஞர்களின் ஒழுக்க நெறிமுறைகள், உம்மாஹ்வின் ஒற்றுமை, மதநல்லிணக்கம் மற்றும் அமைதியை வலியுறுத்திப் பேசினார்.
நபிகளாரின் வாழ்க்கை வரலாறு வெறும் வரலாற்றுப் பதிவு மட்டுமல்ல, அது மனிதகுலத்திற்கான முழுமையான நடைமுறை வழிகாட்டி என்பதை மாநாடு சுட்டிக்காட்டியது.
குடும்பங்கள், கல்வி நிறுவனங்கள், மார்க்க அமைப்புகள் மற்றும் அரசு இணைந்து செயல்படுவதன் மூலமே புதிய தலைமுறையை சமூகப் பொறுப்புள்ளவர்களாக மாற்ற முடியும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

