கொழும்புக்கு அப்பால் ஏனைய மாவட்டங்களுக்கும் மெட்ரோ பஸ் சேவையை விரிவாக்கம் செய்து, 2029 ஆம் ஆண்டிற்குள் பஸ்களின் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்னா குணசேன தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 104 புதிய மெட்ரோ பஸ்கள் நாட்டிற்கு வந்துள்ளதாகவும், அவை செப்டம்பர் மாதத்திற்குள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
தற்போது சேவையிலுள்ள 10 பஸ்கள் மற்றும் ஜப்பானிடமிருந்து பெறப்பட்ட 7 பஸ்களுடன் சேர்த்து, மொத்தம் 121 பஸ்களைக் கொண்டு “கொழும்பு மெட்ரோ அப்அர்பன் லக்ஸரி” (Colombo Metro Urban Luxury) சேவை ஆரம்பமாகவுள்ளது.
இச்சேவையைக் கொழும்புடன் மட்டும் நிறுத்தாமல் ஏனைய மாவட்டங்களுக்கும் விரிவாக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, கொழும்புக்கு வெளியே யாழ்ப்பாணம் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் முதல் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை முழுமையாகப் பயன்படுத்தி, வீதி நிர்மாணம் உள்ளிட்ட பணிகளை உரிய காலத்தில் நிறைவு செய்யுமாறு அரச அதிகாரிகளிடம் பிரதி அமைச்சர் கேட்டுக்கொண்டார். “மக்களின் நிதியில் மேற்கொள்ளப்படும் திட்டங்களைத் தாமதப்படுத்த யாருக்கும் உரிமையில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
