இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகம் ஜப்பான், தென்கொரியா, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல நாடுகளில் புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான விசேட திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
கட்டுமானத் துறை, தொழில்நுட்பத் துறை, சுகாதாரப் பராமரிப்பு, தகவல் தொழில் நுட்பம் (IT), பொறியியல், போக்குவரத்து, விவசாயம் மற்றும் ஆடை உற்பத்தி உள்ளிட்ட பல துறைகளுக்கான ஆளெடுப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக முகவரகத்தின் தலைவர் லால் ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், தகுதியுள்ள, அரைத் தகுதியுள்ள மற்றும் தொழில்முறை பணியாளர்களுக்கு குறைந்த செலவில் இந்த வாய்ப்புகள் வழங்கப்படுவதாகக் கூறினார்.
மேலும், தேவையான ஜப்பானிய மொழித் தேர்ச்சி இருக்கும் பட்சத்தில், பாடசாலையை விட்டு விலகியவர்களும் (School leavers) ஜப்பானில் டிரக் சாரதி (Truck driver) பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என அவர் குறிப்பிட்டார்.
மேலும் தகவல்களைப் பெறவும், விண்ணப்பிக்கவும் முகவரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதமான www.slfea.lk ஐப் பார்வையிடலாம்.
சர்வதேச தொழிலாளர் சந்தையில் இலங்கையின் பங்களிப்பை வலுப்படுத்துவதும், தகுதியுள்ள இலங்கை பணியாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
அத்துடன், வெளிநாடு செல்லும் பணியாளர்கள் சந்தை விலையை விட குறைந்த விலையில் விமான பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள வசதியாக புதிய பயணச்சீட்டு விற்பனை மையம் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
