ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழைப்பின் பேரில், தேசிய ஷூரா சபையின் பிரதிநிதிகளுக்கும் ஆளும் கட்சி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்த இக்கலந்துரையாடல் மிகவும் சுமுகமாகவும் ஆக்கபூர்வமாகவும் அமைந்தது.
தேசிய ஷூரா சபையின் சார்பில், தேசிய ஷூரா சபையின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். எம். ஸுஹைர், செயலாளர் ரஷீத் எம். இம்தியாஸ், பொருளாளர் ஏ. அனஸ் அஸீஸ், முன்னாள் தலைவர் அஷ்-ஷெய்க் எஸ். எச். எம். ஃபலீல், அஷ்-ஷெய்க் அஸாத் அப்துல் முஈத், சகோ. எம். என். ஷாம் நவாஸ் மற்றும் அஷ்-ஷெய்க் முஹம்மத் தாஸிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தற்போதைய அரசாங்கத்திற்கு தேசிய மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் 25க்கும் மேற்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதை ஷூரா சபை சுட்டிக்காட்டியது.
மேலும், ஜனாதிபதி தேர்தல் காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் 27 முக்கிய பிரச்சினைகள் அடங்கிய ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டமையும் நினைவுகூரப்பட்டது.
அரசாங்கம் முன்னெடுக்கும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை மற்றும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பலஸ்தீன விடுதலை மற்றும் காஸா போர் நிறுத்தம் தொடர்பாக வெளியிட்ட தெளிவான நிலைப்பாடு என்பவற்றுக்கு தேசிய ஷூரா சபை தனது வரவேற்பையும் பாராட்டையும் தெரிவித்தது.
புதிய சட்டங்கள் மற்றும் சட்டத் திருத்தங்கள் மக்களின் அடிப்படை உரிமைகள், ஜனநாயக உரிமைகள் மற்றும் தனிநபர் சுதந்திரத்தைப் பாதிக்காத வகையில் அமையும் பொருட்டு, உரிய கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இனவாதம் மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களில் மட்டுமன்றி, உத்தியோகபூர்வ மட்டங்களிலும் காணப்படுவது குறித்து கவலை வெளியிடப்பட்டதுடன், அவற்றைக் கட்டுப்படுத்த கடுமையான சட்ட நடவடிக்கை அவசியமென சுட்டிக்காட்டப்பட்டது.
சமூக நலன், நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதில் தேசிய ஷூரா சபையின் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் மிக முக்கியமானவை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். மேலும், பொறுப்பற்ற சமூக ஊடக பயன்பாட்டைக் கட்டுப்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.
தேசிய ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு அரசியல் பிரதிநிதிகளுக்கும் தேசிய ஷூரா சபைக்கும் இடையிலான இத்தகைய உரையாடல்கள் தொடர்ச்சியாக இடம்பெற வேண்டும் என இருதரப்பினரும் உடன்பட்டனர்.

