இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் 7ஆவது மீளாய்வுக்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று (10) இலங்கையை வந்தடைந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் இவான் பபாஜோர்ஜியோ தலைமையில் இந்தக் குழு இலங்கை வந்துள்ளது.
இலங்கை வரலாற்றில் எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக, 2023 மார்ச் 23ஆம் திகதி முதல் 2027 மார்ச் 19ஆம் திகதி வரையான நான்கு வருட காலப்பகுதியில் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்திருந்தது.
இதன்படி, குறித்த நிதியை 8 தவணைகளாக இலங்கைக்கு வழங்க திட்டமிடப்பட்டது.
இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்க உள்ளனர்.
இந்தக் காலப்பகுதியில் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள், மத்திய வங்கி அதிகாரிகள் மற்றும் ஏனைய முக்கிய தரப்பினரை சந்தித்து அவர்கள் கலந்துரையாடல்களை நடத்த உள்ளனர்.
இதன்போது, இலங்கையின் அண்மைக்கால பொருளாதார முன்னேற்றங்கள், நிதி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
7ஆவது மீளாய்வு வெற்றிகரமாக நிறைவடைந்த பின்னர், இலங்கைக்கு வழங்கப்படவுள்ள சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 8ஆவது கடன் தவணையை விடுவிப்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை பரிசீலனை செய்யவுள்ளது.
