ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் (ACJU) உயர்மட்டப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (10) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
முஸ்லிம் சமூகம் தற்போது எதிர்கொண்டு வரும் பல்வேறு முக்கிய பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன், அவற்றிற்கான நிலையான மற்றும் உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இச்சந்திப்பின் போது நாட்டின் முஸ்லிம் சமூகம் சார்ந்த பின்வரும் அத்தியாவசிய விடயங்கள் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், இது தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய விசேட மகஜர் ஒன்றும் அவரிடம் கையளிக்கப்பட்டது:
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டு வரும் சமூக, பொருளாதார மற்றும் உளவியல் நெருக்கடிகள்.
-
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் வெறுப்புப் பேச்சுகள் (Hate Speech) மற்றும் இனவாதப் பிரச்சாரங்களைக் கட்டுப்படுத்துதல்.
-
பல்வேறு காரணங்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்-குர்ஆன் மொழிபெயர்ப்புப் பிரதிகளை உடனடியாக விடுவித்தல்.
-
அரபுக் கல்லூரிகளைத் முறைப்படி பதிவு செய்தல் மற்றும் இடைநிறுத்தப்பட்டுள்ள அல்-ஆலிம் பரீட்சைகளை மீண்டும் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
-
அரச உயர் பதவிகளுக்கும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் தகுதியான முஸ்லிம் பிரதிநிதிகளை நியமித்தல்.
-
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தங்களைச் சமூகத்தின் மத கலாசார உரிமைகளுக்கு அமைவாக முறையாக முன்னெடுத்தல்.
-
கோவிட்-19 தொற்று காலத்தில் கட்டாயமாகத் தகனம் செய்யப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்களுக்கு நீதி வழங்குதல் மற்றும் அது தொடர்பில் பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை ஒன்றினை உருவாக்குதல்.
-
அரச துறைகளில் பணியாற்றும் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் தமது மத, கலாசார வரையறைகளைப் பேணுவதில் காட்டப்படும் பாரபட்சங்களை முழுமையாக இல்லாமலாக்குதல்.
ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகள் முன்வைத்த கருத்துக்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள், சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் தொடர்பில் தாம் தீவிர கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தார்.
மேலும், இது குறித்துச் சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து விரைவாகச் சாதகமான தீர்வுகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவர் அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில்,
-
பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
-
பொருளாளர் அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான்
-
உப தலைவர்களான அஷ்-ஷைக் எச். உமர்தீன், அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான்
-
உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம்
-
உப பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர்
உட்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஜம்இய்யாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி என 16 பேர் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டனர்.

