முக்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் மீது வெறுமனே “FNA” (For Necessary Action – தேவையான நடவடிக்கைக்காக) என்று குறிப்பிட்டு மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திலீப பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
2019-ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னர் கிடைத்த உளவுத்துறை தகவல்களை அதிகாரிகள் கையாண்ட விதத்தை சுட்டிக்காட்டி அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முக்கியமான தகவல்கள் கிடைக்கும்போது, அதை வெறுமனே கீழ்மட்ட அதிகாரிகளுக்கு மாற்றிவிடாமல் (Forwarding), அதிகாரிகள் நேரடியாகப் பொறுப்பேற்றுச் செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டிய காலம் இது என திலீப பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
அன்றைய அரசு உளவுத்துறைத் தலைவரால் அனுப்பப்பட்ட முக்கியமான பாதுகாப்புத் தகவல், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் விஐபி (VIP) பாதுகாப்புப் பிரிவு உட்பட 4 பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த உளவுத்துறை கடிதம் வெறுமனே “FNA” என்ற குறிப்புடன் மட்டுமே அனுப்பப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய திலீப பீரிஸ், நாட்டின் தீவிர பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான விஷயத்தில் இத்தகைய அணுகுமுறை போதுமானதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் முன் கூட்டியே உளவுத்துறை தகவல் கிடைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் கூறி, சட்டமா அதிபர் திணைக்களத்தால் அவர்கள் மீது 855 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கும் இடத்தில், வெறும் “FNA” என்று எழுதி தகவல்களை மாற்றி அனுப்புவது இனி ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்பதை இந்த அனுபவம் உணர்த்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
