மாத்தறை பிரதேச செயலாளர் திருமதி நதீஷா கௌசல்யாவின் தலைமையில், மாத்தறை பிரதேச உதவிச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு இன்று காலையில் வருகை தந்து புத்தளம் சர்வமதத் தலைவர்களையும் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், மற்றும் பிரமுகர்களையும் சந்தித்தனர்.
தேசிய ஐக்கியம், சகவாழ்வு க்கான செயலணியின் ஏற்பாட்டில், சமூகங்களுக்கிடையில் நல்லுறவை கட்டியெழுப்பும் நோக்கில் மாத்தறையிலிருந்து வருகைத் தந்த இவர்களை புத்தளம் நகர சபை தலைவர் ரபீக் உட்பட புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகளும் புத்தளம் சர்வமத அமைப்பை சார்ந்தவர்களும் புத்தளம் ஜம்இய்யதுல் உலமாவின் உறுப்பினர்களும் வரவேற்றனர்.
இவ்வைபவத்தில், சங்கைக்குரிய புத்தியாகம சந்திர ரத்ன தேரர், சங்கைக்குரிய யொஹான், சுந்தர ராம குருக்கள்,அஷ்ஷைக்.அப்துல் முஜீப், ஆகியோர் குழுவினரை வரவேற்று உரையாற்றினர்.
பிரதேச செயலாளர் திருமதி.நதீஷா கவுசல்யா தானும் தனது குழுவினரும் வருகை
இங்கு வருகை தந்த நோக்கம் பற்றியும் தேசிய ஐக்கியம் ,அதன் அவசியம் குறித்தும் மாத்தறை, புத்தளம் நகரங்கள் இதற்கு முன்மாதிரியாக திகழ்வது குறித்தும் உரையாற்றினார்.
ஆசிரியர் நிஜாம் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
அதனைத்தொடர்ந்து அண்மையில் வெளியிடப்பட்ட , சமன் புஷ்ப லியனகே அவர்களால் எழுதப்பட்ட இறைத்தூதர் பற்றிய வரலாற்று நூல், பிரதேச செயலாளர் திருமதி நதீஷா கௌசல்யாவுக்கு புத்தளம் உலமா சபையின் தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதியீடாக பிரதேச செயலாளர் அவர்கள் உலமா சபைத்தலைவருக்கும் ஒரு அன்பளிப்பை வழங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் குழுவினர் பள்ளிவாசல் வளாகத்தையும் உள்ளக கட்டமைப்பையும் பள்ளிவாசல் செயற்பாடுகளையும் பார்வையிட்டனர்.
இப்பள்ளிவாசலுக்கு ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க மன்னரால் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பையும் அவர்கள் பார்வையிட்டனர். அதைனத்தொடர்ந்து புத்தளம் பள்ளிவாசலில் இருக்கின்ற புராதன மணிக்கூட்டையும் பார்வையிட்டமை விசேட அம்சமாகும்.
வருகை தந்த குழுவினர் பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்ட காலை உணவையும் பரிமாறிய பின் பிரியாவிடை பெற்றுச் சென்றனர்.
மிகவும் சிறப்பான இத்தருணம் கலந்து கொண்ட அனைவரது உணர்வுகளிலும் புத்துணர்வை ஏற்படுத்தியதை இங்கு பதிவு செய்ய வேண்டும்.