அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், சரக்கு கப்பல் மோதியதில் போல்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், பால்டிமோர் பகுதியில் பிரான்சிஸ் ஸ்காட் என்ற பெயரிலான மிக பெரிய பாலம் அமைந்துள்ளது.
இந்த பாலத்தின் மீது இன்று (மார்ச் 26) சரக்கு கப்பல் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 2 கி.மீ. நீளம் கொண்ட பாலத்தின் ஒரு பகுதி இடிந்து நீருக்குள் விழுந்தது. இதனால் பாலத்தில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் நீரில் விழுந்தன.
வீடியோவில், பாலத்தின் மீது மோதிய வேகத்தில் கப்பல் தீப்பிடித்தது. பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் நீரில் விழுந்தன.
தண்ணீரில் சிக்கி தவித்து வரும் 7 பேரை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. சிங்கப்பூர் கொடியுடன் கூடிய டோலி என்ற பெயரிலான அந்த சரக்கு கப்பல் போல்டிமோர் வழியே, இலங்கையின் கொழும்பு நகருக்கு சென்று கொண்டிருந்தது என கடலோர காவல் படை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.