சிரேஷ்ட சட்டத்தரணியும் பதில் நீதவானுமான அல்ஹாஜ் எம்.எம். இக்பால் அவர்கள் நேற்று மாலை காலமானார்கள்.
அவரது மறைவு குறித்து பில்லர்ஸ் அமைப்பு இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது.
சட்டத்தரணி இக்பால் அவர்கள் புத்தளம் சாஹிறாவின் பழைய மாணவர் என்பதுடன் புத்தளத்தின் மூத்த கல்விமான்களுள் ஒருவர். நமது நகர கல்வி எழுச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றவரும் கூட.
புத்தளம் ஸாஹிறாவில் இறுதியாக இடம்பெற்ற பழைய மாணவர் சங்கத் தெரிவின்போது அதன் செயலாளர் பதவியைப் பொறுப்பெடுக்கத் தயாராக இருந்தார்.
வயது மூப்பைப் பொருட்படுத்தாது, தனது சக்தியைப் பிரயோகித்து, ஸாஹிறாவுக்கென சில செயற்திட்டங்களை முன்னெடுக்க ஆர்வமாக இருந்தார். எனினும் பின்னர், தாராள மனதுடன் இளையவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.
எமது, கல்வி மேம்பாட்டுக்கும் சீர்திருத்தத்துக்குமான புத்தளம் கல்வியியலாளர்களின் மன்றம் (PILLARS) தொடங்கப்பட்ட காலம் முதல், அதன் ஆலோசகராக இருந்து எமக்கு உதவுவதில் முன்னின்று உழைத்தவர் சட்டத்தரணி இக்பால் ஆவார்.
புத்தளத்தின் பிரபல பாடசாலைகளில் அவ்வப்போது ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்த்து வைப்பதில் தனது அனுபவ வாயிலாக எமக்கு வழிகாட்டி எம்முடன் கைகோர்த்து உழைத்த பெருந்தகை அவர்.
சமூக விவகாரங்களில் ஆர்வம் கொண்ட துறைசார் நிபுணர்களின் சேவைகளை அவர்கள் வாழும் காலத்திலேயே, அவர்களை மதித்துப் பெற்றுக்கொள்ள சமூகம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்கள் விட்டுச் செல்லும் இடைவெளியை நிரப்புவதற்கான ஏற்படுகள் செய்யப்படுதல் வேண்டும். மறைந்த பின்னர் கைசேதப்படுவது பயனற்றது.
மெளலவி முனீர் அவர்களுக்குப் பின்னர், PILLARS மற்றுமொரு ஆளுமையை இழந்துள்ளது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸை வழங்குவானாக. அவரின் பிரிவால் துயருறும் அனைவருக்கும் மன சாந்தியை அளிப்பானாக.