துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகானின் தலைமையில் அன்டாலியா இராஜதந்திர மாநாடு (ADF) நான்காவது முறையாக நேற்று வெள்ளிக்கிழமை உலகத் தலைவர்களின் வருகையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
இம்முறை ‘துண்டு துண்டாக வெட்டப்பட்ட உலகில், இராஜதந்திரத்தை மீட்டெடுப்பது’ என்ற கருப்பொருளில் இம்மாநாடு இடம்பெறுகிறது.
இம்மாநாட்டில் 20 க்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்கள், 50 க்கும் மேற்பட்ட வெளியுறவு அமைச்சர்கள், 70 க்கும் மேற்பட்ட பிற அரசு அமைச்சர்கள், சர்வதேச அமைப்புகளின் சுமார் 60 மூத்த பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் உட்பட 4,000 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டார்கள்.
இம்மாநாட்டில் கலந்து கொண்ட துருக்கிக்கான இலங்கைத் தூதர் திருமதி சரண்யா ஹசந்தி உருகொடவத்தே திசாநாயக்க, ‘TRT World’ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், இராஜதந்திரத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்த இராஜதந்திர மாநாடு உலகின் பல பகுதிகளில் நிலவும் பிரச்சனைகளை சமாதானமாக தீர்க்க அத்தியாவசியமாகும், குறிப்பாக பலஸ்தீனில் நிலவும் மனிதாபிமான நெருக்கடியின் மீதான கவலையை தீர்க்கும்.
இந்த பிரச்சனைகளை அனைத்தையும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். இதன்மூலம் நாம் போர்களையும் சிக்கல்களையும் தவிர்த்து புரிதலை ஊக்குவிக்க முடியும்.
மேலும், உலக நாடுகளுக்கிடையேயான புரிதலையும், அமைதியையும் மேம்படுத்தும் பணியில் இராஜதந்திரத்தின் முக்கிய பங்கை விளக்கியதோடு, இலங்கை – துருக்கி இடையேயான பல நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கும் உறவுகளையும் குறித்து அவர் பேசினார்.