எதிர்வரும் ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் தங்களது மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், அரசாங்கத்தினால் விசேட விடுமுறை நேரங்களை உள்ளடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் 28 திகதியிடப்பட்ட, EST-6/03/LEA/3125 எனும் குறித்த சுற்றறிக்கை பொது நிர்வாக அமைச்சினால் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சுக்களின் செயலாளர்கள், இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்டச் சபைகளின் தலைவர்களுக்காக குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, தொழுகைகள், மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக நாளாந்தம் குறிப்பிட்ட நேரத்தை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ரமழான் பெருநாளுக்கு 14 நாட்களுக்கு முன்பாக, தகைமையுடைய நபர்களுக்கு பெருநாள் முற்பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த காலத்தின் போது சமய வழிபாடுகளை மேற்கொள்ளக்கூடியதாக வேலை நேரங்களை ஒழுங்கு செய்து கொடுத்தல், தவிர்க்கமுடியாத விடுமுறை தினங்கள் உள்ளிட்ட விடயங்களும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.