மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட புற்றுநோய்க்கான மருந்து விற்பனை தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
விசாரணையின் பின்னர், சம்பவம் தொடர்பாக கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கமைய நேற்று இரண்டு விசாரணைக் குழுக்கள் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தன.
சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை இருபத்தி நான்கு மணித்தியாலங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் மஹரகம வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகரவுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இதன்படி நேற்று சுகாதார அமைச்சின் செயலாளரிடம் அறிக்கை கையளிக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வைத்தியசாலைக்கு நன்கொடையாளரால் வழங்கப்பட்ட தடுப்பூசி மருந்தை வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் 21,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்தபோது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
இதன் பின்னர் குறித்த ஊழியரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ஒரு தொகை தடுப்பூசியும், ரூ. 4,25,290 பணமும் கைப்பற்றப்பட்டது.