சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும் அடிமையாதல் மற்றும் நடத்தை ரீதியான சிக்கல்களைத் தடுக்கும் நோக்கில், புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
சிறுவர்களின் கைத்தொலைபேசி பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது மற்றும் சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் தற்போது தீவிரமாக கலந்து ஆலோசித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் சூழலில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கொள்கைப் பரிந்துரைகளை உருவாக்குவதற்காக, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் விசேட ஆலோசனைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
