இனிவரும் காலங்களில் ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ், ஏழை மற்றும் மிக ஏழை குடும்பங்களுக்கு மாத்திரமே கொடுப்பனவுகள் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், இந்த ஆண்டில் அதன் இரண்டாம் கட்டத்திற்குள் பிரவேசித்துள்ளதுடன், பயனாளிகளின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது, நான்கு பிரிவுகளின் கீழ் சுமார் 1.6 மில்லியன் மக்கள் கொடுப்பனவுகளைப் பெற்றிருந்தனர்.
இருப்பினும், கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் இடைக்காலப் பிரிவைச் (Transitional Category) சேர்ந்த 315,000 பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டதுடன், நடப்பு 2026 ஜூன் மாதத்தில் பாதிக்கப்படக்கூடிய பிரிவைச் (Vulnerable Category) சேர்ந்த 425,000 பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த உதவி ஆணையாளர் அஷான் தர்ஷன, இந்த இரு பிரிவுகளையும் சேர்ந்த குடும்பங்களில், ஏழை அல்லது மிக ஏழைகளாக அடையாளம் காணப்படும் குடும்பங்களுக்கு, திருத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ் மீண்டும் தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என விளக்கமளித்துள்ளார்.
